சென்னை: தனது பதவி நீக்கத்தை எதிர்த்து தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலரும், செம்பாக்கம் 3-வது மண்டலக்குழுத் தலைவருமான ஜெயபிரதீப்பை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயபிரதீப், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலக் குழு தலைவராக இருந்த என்னை, சக கவுன்சிலர்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், மண்டலக்குழுக் கூட்டத்தை முறையாக கூட்டவில்லை என்றும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பதவி நீக்கம் செய்துள்ளனர். இது சட்டவிரோதமானது. எனது விளக்கத்தைக் கேட்காமல் என்னை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.21-க்கு தள்ளிவைத்துள்ளார்.