புதுச்சேரி: கஞ்சா, பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு இடையூறாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தியுள்ளதாக புதுச்சேரி ஆளுநர், முதல்வரிடம் பேரவைத் தலைவர் செல்வம் புகார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நோணாங்குப்பம் டோல்கேட்டில் மதுபோதையில் 3 பேர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநிலத் தலைவர் அமுதரசன் காவல் நிலையத்துக்கு பஞ்சாயத்து செய்ய சென்றார். அப்போது இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடந்தது.
போலீஸார் அனுமதி தராத நிலையில் 2 மணி நேரம் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் போராட்டத்தினால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் இன்று (ஏப்.2) செய்தியாளர்களிடம் கூறியது: “தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அப்பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவமனைக்கும் சென்ற 3 ஆம்புலன்ஸ்கள் இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் உண்மை நிலையை அறியாமலேயே முன்னாள் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தியுள்ளார்.
கடந்த 27-ம் தேதி ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆனந்த், பாலா, சம்பத் ஆகிய மூன்று பேர் மது அருந்தி விட்டு அப்பகுதியில் வந்த சுற்றுலாப் பயணிகளை மிரட்டி தாக்கினர். இதன்பேரில் வந்த புகாரையடுத்து போலீஸார் அங்கு சென்றனர். ஆனால், அந்த போலீஸாரையும் மிரட்டினர். இதையடுத்து எஸ்.ஐ. தலைமையில் சென்ற போலீஸார் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்து வாதாடினார். காவல் நிலையம் பெஞ்சில் அமர்ந்து காலை நீட்டியப்படி தகாத வார்த்தையால் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை திட்டினார். வீடியோ ஆதாரமும் உள்ளது. ரவுடிகள் மீது போக்சோ, வழிபறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
அவர்களுக்கு ஆதரவாகதான் முன்னாள் முதல்வர், எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏக்கள் பொதுமக்களுக்கு இடையூறு தந்து போராடியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் போராட்டத்தை காவல் துறை வேடிக்கை பார்க்கக் கூடாது. சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் ஜாமீனில் வெளிவராத வகையில் வழக்குகளை பதிவு செய்யவேண்டும். இது தொடர்பாக ஆளுநர், முதல்வர், காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் போராட்டங்களையும், அரசியல் நாடகத்துக்கான போராட்டங்களையும் இனியும் போலீஸார் வேடிக்கை பார்க்கக் கூடாது. பட்ஜெட்டில் முதல்வர் மக்கள் நலத்திட்டங்கள் அறிவித்துள்ளதற்கு பயந்துதான் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸார் போராட்டம் நடத்துகின்றனர்” என்றார்.