தமிழகம்

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (மார்ச் 31) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.1ம் தேதி ஓரிரு இடங்களிலும், 2 முதல் 4-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்ப நிலை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி, கரூர் பரமத்தியில் 77 டிகிரி ஃபாரன் ஹீட் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன் ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT