ராமேசுவரம்: நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவினால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மார்ச் 12 முதல் கடலுக்குச் செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். திருவிழா நிறைவடைந்த நிலையில், திங்கட்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றனர்.
இதில் கென்னடி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த சங்கர், அர்ஜுனன், தர்ம முனியாண்டி ஆகிய 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். விசைப்படகையும், 3 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படைமுகாமுக்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செவ்வாய்கிழமை மாலை வவுனியா சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கடந்த ஜனவரியிலிருந்து 20 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 148 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.