திருப்பத்தூர்: “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அது நடக்கும்.” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஓபிஎஸ் அணியின் வாணியம்பாடி நகரச் செயலாளர் கோபிசங்கர் மருமகள் நித்தியாவின் சீமந்த நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதலல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். வாணியம்பாடிக்கு வருகை தந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக (ஓ.பி.எஸ்- அணி) கட்சியினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், முன்னள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா ? என்பது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் தான் பதிலளிக்க வேண்டும். இருப்பினும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டவர் செங்கோட்டையன்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக கட்டமைத்தனர். அதேபோல, பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026 ம் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இது நடக்க வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கும் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும். அது நடந்தால் மட்டுமே வரும் தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்ற ஆட்சி அமைக்கும்.
எல்லாரும் ஒன்று சேர்ந்தால் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது மோசமான செயல். அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வருகிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது.
தற்போது சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பிறகு யாரெல்லாம் இந்த தவறு செய்துள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகும்.” என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.