பவன் கல்யாண் | கனிமொழி 
தமிழகம்

'பாஜகவுக்கு முன், பாஜகவுக்கு பின்...' - பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி

செய்திப்பிரிவு

சென்னை: வெவ்வேறு காலகட்டங்களில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஆதரவாகவும் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவுகளை திமுக எம்.பி கனிமொழி பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.

மும்மொழி கொள்கை விவகாரம் இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் நிலவி வரும் நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேசும்போது, “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.

இந்த விமர்சனம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், திமுகவினர் பலரும் பவன் கல்யாணை கடுமையாக சாடி வருகின்றனர். இதையொட்டி, பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக எம்.பி கனிமொழி, ‘பாஜகவுக்கு முன், பாஜகவுக்கு பின்’ என பவன் கல்யாண் பேசியதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். “பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பாக, நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வட மாநில அரசியல் கட்சி தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று 2017-ஆம் ஆண்டு பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார்‌‌. மொழி பேதங்களை கடந்து தொழில்நுட்பம் மூலம் திரைப்படங்கள் பார்க்கப்படுகின்றன” என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு காலகட்டங்களில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஆதரவாகவும் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவுகளையும் கனிமொழி பகிர்ந்துள்ளார்.

Technology allows us to watch movies beyond language barriers. https://t.co/mT03mJARqM pic.twitter.com/w3qRgcSsCY

SCROLL FOR NEXT