அண்ணாமலை | கோப்புப்படம் 
தமிழகம்

“ரூபாய் குறியீடு... கருணாநிதி அங்கீகரித்ததை ஸ்டாலின் நிராகரிக்கிறார்!” - அண்ணாமலை விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: “தந்தை கருணாநிதி அங்கீகரித்ததை மகன் ஸ்டாலின் நிராகரிக்கிறார்” என்று ரூபாய் குறியீடு விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழகத்தின் 2025-2026-ம் ஆண்டுகான பட்ஜெட் இலச்சினையில், ரூபாய் அடையாள குறியீடு மாற்றப்பட்டுள்ளது. தமிழரான உதயகுமாரால் வடிவமைக்கப்பட்ட குறியீடு, முழு பாரதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரூபாய் தாள் மற்றும் நாணயத்தில் இணைக்கப்பட்டது. உதயகுமார் முன்னாள் திமுக எம்எல்ஏ-வின் மகன்’ என்று குறிப்பிட்டு, லோகோவில் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதை முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார்.

அதன்பின், அண்ணாமலை தனது இன்னொரு பதிவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் ரூபாய் குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் வாழ்த்து பெறும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “தேவநாகரி எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் ரூபாய் சின்னம் நீக்கப்பட்டது என்று தமிழக திட்டக்குழு நிர்வாகத் துணைத் தலைவர் கூறுகிறார். முதல்வர் ஸ்டாலினை சுற்றி இருப்பவர்களின் அறிவுத் திறனையே இது காட்டுகிறது. வெற்று விளம்பரங்களும், அர்த்தமற்ற முடிவுகளும்தான் திமுகவின் 4 ஆண்டு ஆட்சியின் தரத்துக்குச் சான்று தந்தை கருணாநிதி அங்கீகரித்த ரூபாய் குறியீட்டை மகன் ஸ்டாலின் நிராகரிக்கிறார்” என்று கடுமையாக கூறியுள்ளார்.

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை முதலில் தமிழ் பெயராக மாற்றிக் கொள்ளட்டும். திமுக அரசின் அனைத்து தோல்விகளையும் மறைக்க இந்த நாடகம் தொடர்கிறது. திமுக எப்போதும் பிரிவினைவாதத்தையும், தேச விரோத மனநிலையையும் பேசுகிறது’ என தெரிவித்துள்ளார்.

லோகோ சர்ச்சை என்ன? - தமிழகத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில், தேவநாகரி எழுத்தில் உள்ள மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என குறிப்பிட்டு ரூபாய் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினையை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இந்திய ரூபாய்க்கென தனிக் குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இந்நிலையில், அவர் வடிவமைத்த தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீடு இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை பட்ஜெட்டில் அந்த குறியீடே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கூட தமிழக பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு தமிழக பட்ஜெட் இலச்சினை ‘ரூ’ என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டிருப்பதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

TN CM Thiru @mkstalin was spreading his delusional fears to divert people's attention from the Enforcement Directorate raid happening in TASMAC, the Liquor Minister, and the liquor-supplying companies in Tamil Nadu.

The ED has uncovered documents from the distilleries linked to… pic.twitter.com/wkZ0XQPPzE

SCROLL FOR NEXT