பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுகவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.
தமிழக மக்களவை உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் திமுக சார்பில் நடந்த போராட்டத்தில், எருமை மாட்டுக்கு மத்திய அமைச்சரின் புகைப்படத்தை அணிவித்து அழைத்து வந்தனர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் உருவப் படத்தினை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திமுகவினரின் செயலை கண்டித்து பொள்ளாச்சியில் இன்று காந்தி சிலை அருகே பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறிய போலீஸார், பாஜகவினரை கைது செய்ய முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் ஒருவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினின் உருவப் படத்தினை பாஜகவினர் செருப்பால் அடித்தும், திமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன் தலைமையிலான போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.