செல்வராஜ், பாபு அலெக்சாண்டர், அன்டோ நல்லையா, அந்தோனிராஜ், அருள்​பிலிப்​ 
தமிழகம்

திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரான சாட்சியை கொன்ற வழக்கில் ஒருவருக்கு தூக்கு: மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தில் 2016-ல் பெருமாள் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தரப்பினர் கொலை செய்ய முயற்சி செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த ராமசுப்பு மகன் வைகுண்டம் (47) என்பவர், செல்வராஜ் தரப்பினருக்கு எதிராக சாட்சியளித்தார். இதனால், வைகுண்டம் மீது செல்வராஜ் தரப்பினர் ஆத்திரமடைந்தனர்.

2022 மார்ச் 10-ம் தேதி பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கால்வாயில் வைகுண்டம் குளித்துக் கொண்டிருந்தார். அங்கு சென்ற செல்வராஜ் (43), அந்தோணி ராஜ் (எ) பிரபாகரன் (46), தேவதாஸ் என்பவரின் மகன்களான அருள் பிலிப் (31), அன்டோ நல்லையா (28), திரவியம் என்பவரின் மகன் பாபு அலெக்சாண்டர் (41), கோவில்பிச்சை என்பவரின் மகன் ராஜன் (70), ராஜன் மனைவியான லீலா (60), தேவதாஸ் மனைவி ஜாக்குலின் (59) ஆகிய 8 பேரும், வைகுண்டத்துடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் வைகுண்டம் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சுமத்தப்பட்ட செல்வராஜுக்கு தூக்கு தண்டனையும், அந்தோணி ராஜ், அருள் பிலிப், அன்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வலீலா, ஜாக்குலீன் ஆகிய மூவருக்கும் 2 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT