தமிழகம்

நேபாளத்துக்கு புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் சுற்றுப் பயணம்

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நேபாள நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நேபாள அரசு அங்குள்ள சட்டப்பேரவையைக் காண புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்தது. நேபாள அரசின் அழைப்பின் பேரில் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் ஒரு வார கால சுற்றுலா பயணமாக நேபாளம் செல்கின்றனர். இதன்படி எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். அங்கு தங்கும் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாள தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.

மார்ச் 3-ம் தேதி காலை விமானம் மூலம் போகரா செல்லும் எம்.எல்.ஏக்கள், அங்கு சட்டப்பேரவையை பார்வையிடுகின்றனர். அதன்பிறகு அங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர். 4-ம் தேதி போகராவில் இருந்து காத்மாண்டு திரும்புகின்றனர். மாலையில் பதான்தர்பார், சுயம்புநாதர் கோயிலை பார்வையிடுகின்றனர். 5-ம் தேதி பசுபதி நாதர் கோயில், கால பைரவர் கோயில்களையும், 6-ம் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோயில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர். 7-ம் தேதி காத்மாண்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்புகின்றனர்.

சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 22 பேர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT