சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அனைத்து சமூகத்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
சமூகநீதி: இந்நிலையில் இந்த காலியிடங்களை நிரப்பும்போது பட்டியல் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து சமூக நீதியை பின்பற்றக் கோரியும், அனைத்து சமூகம் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் நேற்று கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜனநாயக மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையத்தின் தலைவரான மூத்த வழக்கறிஞர் சி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர்களான ஆர்.சி.பால்கனகராஜ், எம்.வேல்முருகன், வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி கோஷம் எழுப்பினர்.