இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பிய ரமேசுவரம்  மீனவர்கள் 
தமிழகம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் தாயகம் திரும்பினர்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேர் தாயகம் திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து டிசம்பர் 23-ல் கடலுக்குச் சென்ற சேகு பூண்டி ராஜ், அந்தோணி ஆரோன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 17 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜன.25-ல் கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகிலிருந்த 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

32 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.32 மீனவர்களில் 27 மீனவர்களுக்கு மட்டும் தலா இலங்கை மதிப்பீட்டில் ரூ. 50 ஆயிரம் அபராதமும், மற்ற விசைப்படகு ஓட்டுநர்கள், இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதித்து மன்னார் மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதில், மன்னார் மற்றும் வவுனியா நீதிமன்றங்களில் 27 மீனவர்கள் மட்டும் அபராதத் தொகையை கட்டி விடுதலையடைந்ததால், கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் 27 மீனவர்களும் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்து வரப்பட்டனர்.

SCROLL FOR NEXT