சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக, அமமுக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின் 10-வது சுற்று ஏல அறிவிப்பில், தென் தமிழகத்தின் 9990.96 சதுர கி.மீ. ஆழ்கடல் பரப்பு இடம்பெற்றுள்ளது.
உயிரி பன்மய வளம்: தமிழகத்தின் மிகவும் முக்கிய உயிரி பன்மய வளங்களில் ஒன்றான மன்னார் வளைகுடா பகுதிகள், பன்னாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் தளமாக தகுதி பெற்று விளங்குகின்றன.
இப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படும். மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகும். எனவே, இந்த ஆபத்தான ஏல அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பு கொள்கையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பில், தென் தமிழக ஆழ்கடலின் பகுதிகளும் இடம்பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இத்திட்டத்தினால், கடல்வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கக்கூடும். மீன்வளம் குறையும்.
எனவே இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதுடன், அதற்கான ஏல அறிவிப்பையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.