கோவை: தமிழகத்துக்கு கல்வி, பேரிடர் நிதி தர மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோவை வருகையை கண்டித்து காந்திபார்க் பகுதியில் நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி.மனோகரன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கருப்புசாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பகவதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபெதிக, இ.கம்யூ, திராவிடர் கழகம், திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்டவை சார்பில் பீளமேடு பி.எஸ்.ஜி டெக் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பீளமேடு ஹோப்காலேஜ் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.