மெரைன் போலீஸாரால் மண்படம் முகாமில் ஒப்படைக்கப்பட்ட  இலங்கை தமிழர்கள் | படம்: எல். பாலச்சந்தர் 
தமிழகம்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தனுஷ்கோடி அருகே நான்காம் மணல் தீடையில் மனித நடமாட்டம் இருப்பதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை காலை இந்திய கடலோர காவல் படையினர் மணல் தீடையில் ஆவணங்களின்றி தனியாக நின்றிருந்த இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேரை மீட்டு, தனுஷ்கோடியில் மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மெரைன் போலீஸார் நான்கு பேரையும் விசாரணைக்காக மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், இலங்கையின் வவுனியா மாவட்டம் பூமாங்குளத்தைச் சேர்ந்த கலைச்செல்வம் (37) அவரது மனைவி கிருபனா (33), மகன்கள் சிபின் (7) சார்லின் (5) ) ஆகிய நான்கு பேரும் இலங்கையில் உள்ள தலைமன்னார் கடற்கரையிலிருந்து ஃபைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே நான்காம் மணல் தீடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்திறங்கியது தெரியவந்தது. முன்னதாக கலைச்செல்வம், கிருபனா தம்பதியினர் 2018-ம் ஆண்டு வரையிலும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அகதிகள் முகாமில் வசித்து வந்து பின்னர் இலங்கை சென்றதாகவும், இலங்கையில் வாழ்வாதாரம் இல்லை என்பதால் மீண்டும் தமிழகம் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர், 4 இலங்கை தமிழர்களும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதம் முதல் இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 314 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT