தமிழகம்

செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும்: டெல்லியில் மேலிட பொறுப்பாளரிடம் 25 மாவட்ட தலைவர்கள் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று தமிழக மலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை டெல்லியில் நேற்று சந்தித்து 25 மாவட்டத் தலைவர்கள், 2 எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் உள்ளனர். கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இணையவழி கூட்டத்துக்கு அவர் அழைத்தால், அதை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.

அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக மேலிட பொறுப்பாளராக இருந்த அஜோய்குமாரிடம், செல்வப்பெருந்தகையை மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில் மேலிட பொறுப்பாளர் மாற்றப்பட்டு, கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று 25 மாவட்டதலைவர்கள் மற்றும் 2 எம்எல்ஏக்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

கட்சி காணாமல் போகும்: இது தொடர்பாக மாவட்டத் தலைவர்கள் கூறியதாவது: செல்வப்பெருந்தகை மூத்த தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்களுடன் இணக்கமாக இல்லை. திராவிட மாடல் ஆட்சியும், காமராஜர் ஆட்சியும் ஒன்று என, திமுக அரசுக்கு ஆதரவாக பேசிவருகிறார்.

இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ள நிலையில், கிராம கமிட்டி, நகர கமிட்டி, வட்டார கமிட்டி என செல்வப்பெருந்தகை நியமித்து வருகிறார். கட்சித் தலைமை அனுமதி இன்றி, இவரது படம் இடம்பெற்ற அடையாள அட்டையை மாநிலம் முழுவதும் விநியோகித்து வருகிறார்.

இவரே மாநிலத் தலைவராக நீடித்தால், 2026 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும். அதனால் செல்வப்பெருந்தைகையை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT