கோப்புப் படம் 
தமிழகம்

பெண் காவலரிடம் செயின் பறிப்பு எதிரொலி: மின் ரயில் வழித்தடங்களில் இரவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் மின்சார ரயில் வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 25 மதிக்கத்தக்க பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு குடிபோதையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சத்தியபாலு என்பவரை மாம்பலம் ரயில்வே போலீஸார் கைது செய்து, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக மின்சார ரயில், பறக்கும் ரயில் வழித்தடங்களில் இரவு 10 மணி 12 மணி வரை கூடுதலாக ரயில்வே போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

இவர்கள் சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களின் நடைமேடைகளிலும் பகல், இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக, இரவு 10 மணிக்கு முதல் 12 மணி வரை போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு நடைமேடையிலும் 3 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதுதவிர, மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் 2 பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். ரயில் நிலையங்களில் கூடுதல் காவலர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய, சென்னை நகர காவல் துறையிடம் இருந்து 300 காவலர்கள் பெறப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT