தமிழகம்

‘காசி தமிழ் சங்கமம்’ அனுபவ பகிர்வு போட்டி: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு அனுபவப் பகிர்வு போட்டி நடத்தப்படும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காசி தமிழ் சங்கமம் என்பது இந்தியாவின் இரு பண்டைய அறிவு மையங்களான காசி, தமிழகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார தொடர்பை மீட்டெடுக்கவும், வலுப்படுத்தவும் பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும். இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிப்.15 முதல் 24-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் முனைவோர்கள், மகளிர், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் என 1000 பேர், பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 200 மாணவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு காசி மற்றும் பிற முக்கிய இடங்களுக்குச் செல்வார்கள்.

பிரயாக்ராஜின் சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா கொண்டாட்டம் என்ற மற்றொரு முக்கிய நிகழ்வோடு இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இணைந்துள்ளது.

இந்நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு ‘காசி தமிழ் சங்கமத்தின் அனுபவப் பகிர்வு 3.0 - 2025’ என்ற தலைப்பில் ஆளுநர் மாளிகை சார்பில் ஒரு போட்டி நடத்தப்படும். ‘அனுபவப் பகிர்வு’ கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 1000 சொற்களைக் கொண்ட, கையால் எழுதப்பட்ட வடிவத்தில் (ஏ-4 தாள்) இருக்க வேண்டும்.,

இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து வரும் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க முடியும். அனுபவக் கட்டுரையை ‘ஆளுநரின் துணைச் செயலாளர் (பல்கலைக்கழகங்கள்), ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, சென்னை - 600 022’ என்ற முகவரிக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், வீட்டு முகவரி, தொகுதி எண், காசி - தமிழ் சங்கமம் 3.0 - 2025-ல் உள்ள குழுவின் வகை, தொடர்பு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் (மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் முனைவோர்கள், மகளிர், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT