ஈரோடு: அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நடத்தியபாராட்டு விழாவில் எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்கள் இடம் பெறாதது ஏன்? என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காதது சர்ச்சையானது.
இதுகுறித்து கோபி குள்ளம்பாளையம் மற்றும் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டுகால கனவு. இந்த கனவுத் திட்டத்துக்காக கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கினார். 2011-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம், அத்திட்டம் தொடர்பான ஆய்வுப்பணியை மேற்கொண்டார். அதன்பிறகு, முன்னாள் முதல்வர் பழனிசாமி காலத்தில் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் நாங்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். ஆனால், அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில், திட்டத்துக்கு முன்னோடியாக இருந்த இருவரின் படங்கள் விழா மேடையிலும், அழைப்பிதழிலும் இடம்பெறவில்லை. முன்னதாக, அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாக்குழுவைச் சேர்ந்த 4 பேர் என்னை சந்தித்து, விழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். அப்போது நான், ‘எங்களைவாழவைத்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் அழைப்பிதழில் இல்லை. நீங்கள் என்னிடம் கலந்து பேசியிருந்தால், என்னுடைய உணர்வுகளை உங்களிடம் பிரதிபலித்திருப்பேன். 3 நாட்களுக்கு முன்பாகத்தான், எங்களுக்கு அழைப்பிதழை தருகிறீர்கள்’ என்று தெரிவித்தேன்.
இதன் தொடர்ச்சியாகவே அந்த விழாவில் நான் பங்கேற்க வில்லை. விழாவை புறக்கணிக்கிறேன் என்பதை விட, என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக் கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
பகிரங்க மோதல்: அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பகிரங்க மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.