தமிழகம்

நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி சாடல்

செய்திப்பிரிவு

மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒப்புக் கொள்ளும் நிலையில், ஆளுநர் ரவி இனி என்ன சொல்லப்போகிறார் என அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் பிரதமர் மோடிக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டப்பேரவை மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா. தமிழகத்தில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி, தமிழக அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை. ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதல்வர், ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையைத் தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT