ஆளுநருக்கு நடத்தை விதிகள் மற்றும் கோப்புகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்ற படஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அவையில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விவாதிப்பதற்கான திமுக எம்பிக்கள் கூட்டம் நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற அவைகளில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி, பள்ளிக்கல்வி நிதி, வக்பு வாரிய திருத்தச்சட்டம், ஒரேநாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து, 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறி்ப்பாக ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்குதல், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும். டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செயய வைத்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், உருக்கு இரும்பு 5,370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளதை உலகுக்கு அறிவித்த அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக்கோரி கழக மாணவரணி, திமுக எம்.பி.க்கள் வரும் பிப்.6-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, இந்த முறை தமிழகத்தின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்துக்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
திமுக எம்.பி.க்கள் கூட்டம் நிறைவுற்றதும் திமுக மாணவரணி சார்பில் பிப்.6 அன்று யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பாக, மாணவரணி நிர்வாகிகள், எம்.பி.க்கள் உடன் முதல்வர் விவாதித்தார். அப்போது, நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.