கோப்புப் படம் 
தமிழகம்

சென்னை விரிவாக்க பகுதிகளில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு அனுமதி: கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையை தவிர, மாவட்ட பகுதிகளில் நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில் தற்போது, 2,950 தனியார் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போதுள்ள நிலவரப்படி, 20 கி.மீ. வரை சிற்றுந்துகள் இயக்கலாம். அதில், 4 கி.மீ., ஏற்கெனவே உள்ள வழித்தடங்களில் செல்லலாம். மீதமுள்ள 16 கி.மீ., புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும்.

சிற்றுந்துக்கான தேவை அதிகரித்து வரும் வகையில், புதிய மாற்றங்களை செய்து, சேவையை விரிவுப்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் சிற்றுந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, புதிய சிற்றுந்து வரைவு திட்டம் குறித்து தமிழக அரசிதழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி வெளியிட்டது. இந்த சிற்றுந்து வரைவு திட்டம் குறித்து, கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். அரசு போக்குவரத்து அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். குறிப்பாக, சிற்றுந்துகளுக்கு அனுமதிக்கப்படும் தூரத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து, அறிக்கையை உள்துறை மற்றும் போக்குவரத்து துணை ஆணையரகம் தயாரித்து, தமிழக அரசிடம் அளித்தது.

இந்நிலையில், புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே கூறப்பட்ட வரைவுகளை பின்பற்றி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி, 25 கி.மீ. வரை சிற்றுந்துகள் இயக்கலாம். இதில், 16.25 கி.மீ., புதிய வழித்தடத்திலும், மீதமுள்ள 8.75 கி.மீ., ஏற்கெனவே பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில் செல்லலாம். மேலும், சிற்றுந்துகள் சென்றடையும் இடத்தில் இருந்து அடுத்த ஒரு கி.மீ. தொலைவுக்குள் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை, கோயில்கள், சந்தைகள் இருந்தால், சிற்றுந்துகள் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே அதிகளவில் பேருந்து சேவை உள்ள தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களை உள்ளடக்கிய 172 சதுர கிமீ சுற்றளவுக்குள், சிற்றுந்து பெர்மிட்கள் வழங்கப்படாது. அதே நேரம் சென்னை மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட, பயணிகளுக்கு அதிகம் தேவைப்படும் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் 240 சதுர கிமீ சுற்றளவில் சிற்றுந்துகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே உள்ள சிற்றுந்து உரிமையாளர்கள், தங்களது பர்மிட்டுகளை சரண்டர் செய்து விட்டு, புதிய பர்மிட்டுகளை பெறலாம். அதுபோல,

பேருந்து நிலையங்களில் சிற்றுந்துகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி, அங்கிருந்து இயக்க அனுமதிக்கப்படுகிறது. சிற்றுந்துகளுக்கான வழித்தடங்களை மாவட்ட ஆட்சியர்கள் அல்லது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இறுதி செய்வார்கள். பின்னர், அந்த வழித்தடங்களில் தேவையான அளவுக்கு சிற்றுந்துகள் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, சென்னை மற்றும் மாவட்ட பகுதிகளில் கூடுதல் சிற்றுந்துகள் வசதியை பெற முடியும். அதுபோல, 2 கி.மீ. வரை ரூ.2-ம், 2 முதல் 4 கி.மீ. வரை ரூ.4 ம், 4 முதல் 6 கி.மீ வரை ரூ.5-ம், 6 முதல் 8 கி.மீ. வரை ரூ.6ம், 8 முதல் 10 கி.மீ. வரை ரூ.7-ம், 10 முதல் 12 கி.மீ வரை ரூ.8ம், 12 முதல் 18 கி.மீ. வரை ரூ.9 ம், 18 முதல் 20 கி.மீ. வரை ரூ.10 வரை என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முதல் வரும் மே 1-ம் தேதி முதல் அமலாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் பேருந்து சேவைகளை அணுகுவதை மேம்படுத்துவதும், இணைப்பு வாகன சேவையை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். சென்னையில் முதல்முறையாக தனியார் சிற்றுந்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT