ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம் 
தமிழகம்

“மகன், பேரன்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் துண்டு போட்டு வைக்கிறார் ஸ்டாலின்” - ஆர்.பி.உதயகுமார்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மகன், பேரன்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் துண்டு போட்டு வைப்பதையே முதல்வர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக மதுரை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பி.செந்தில்குமார், திருமங்கலம் தொகுதி முன்னாள் திமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுந்தர், மனோஜ் குமார், அரவிந்த், சிவன், ஹேம ராஜ்குமார், மாலிக் ராஜா, சரவணன், ரமணா, ராமச்சந்திரன், பாண்டியராஜன், தங்கமணி உள்ளிட்ட பலர் சட்டமன்ற எதிர்கட்சித்துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுத்து, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையை சேர்ந்த சிலரே குற்றச்செயலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லும் நிலையை நாம் எப்போது மீண்டும் பார்க்க முடியும் என்கிற ஒரு ஏக்கம் மக்களிடத்திலே தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது

திமுக அரசு பொறுப்பேற்ற நாள்முதல், பாலியல் வன்கொடுமைகள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பது என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது. போதை பொருள் நடமாட்டம் சுனாமி போல் கிராமம் முழுவதும் சூழ்ந்து உள்ளது. அண்மையில் சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டார். அதற்கு காரணமானவர்களை நீதிமன்றத்தின் முன்நிறுத்தி தண்டனைப் பெற்று தருகிற காவல்துறை இன்றைக்கு அவர்களை காப்பாற்றுவதற்கு மறைமுகமாக முயற்சி எடுக்கிறதோ என்கிற ஒரு அச்சமும், ஸ்டாலின் அரசு மீது அவநம்பிக்கையும் இந்த தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் பணமோசடி வழக்கு ஒன்றில் காவல்துறையை சேர்ந்த சிலர் ஈடுபட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரூ.20 லட்சத்தை ஹவாலா பணம் என்று பறிமுதல் செய்த திருவல்லிக்கேணி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமான வரித்துறையை சேர்ந்த தாமோதரன் பிரதீப் பிரபு ஆகியோர் அதிலிருந்து ரூ.15 லட்சத்தை எடுத்துள்ளனர். இந்த வழக்கில் ராஜாசிங் உள்பட நான்கு பேரையும் திருவல்லிக்கேணி காவல்துறை கைது செய்திருக்கிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் உள்ள துண்டு சீட்டு முதல்வர், தன் மகனுக்காகவும், பேரன்களுக்காகவும் ஆட்சி அதிகாரத்தில் துண்டு போட்டு வைப்பதையே தன்னுடைய தலையாய கடமை என்று நினைத்து செயல்படுகிறார். ஏழை மக்களை வாழ்வை வளமாக்குவதற்கு அவர் என்ன செய்தார்? என்று கேட்கிற நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிற இந்த அதிர்ச்சி அலை ஆட்சி மாற்றத்தை உருவாக்கும், அப்போது கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT