ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் ஒருவர் நேற்று தனது தபால் வாக்கினைப் பதிவு செய்தார். 
தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 246 தபால் வாக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 246 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 256 பேர் வீடுகளில் இருந்து தபால் வாக்களிக்க 12 டி விண்ணப்பத்தை அளித்து இருந்தனர்.

இவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பதிவு செய்ய 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் கடந்த 23-ம் தேதி தொடங்கி 24, 25-ம் தேதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இறுதிநாளான நேற்று மாலை நிறைவடைந்தது.

இதில், வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கு செலுத்த ஒப்புதல் அளித்து இருந்த 256 பேரில், 85 வயதுக்கு மேற்பட்ட 6 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், ஒரு வாக்காளர் இடமாறுதல் ஆனதாலும், 3 வாக்காளர்கள் மரணமடைந்ததாலும், மொத்தம் 10 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தபால் வாக்குப்பதிவு முடிவில், 85 வயதிற்கு மேற்பட்ட199 பேர், 47 மாற்றுத்திறனாளிகள் என 246 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.

புதிய அடையாள அட்டை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக, கடந்த 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில், 19 லட்சத்து 77 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். இதில், புதியதாக 35 ஆயிரத்து 855 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். மாவட்ட அளவில் புதிய வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பித்த 49 ஆயிரத்து 295 வாக்காளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இதில் முதல்கட்டமாக 19 ஆயிரத்து 172 பேருக்கு புதிய அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் புதியதாக இணைந்த, புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருந்து, திருத்தம் மேற்கொண்டவர்கள் என 1,500 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு படிப்படியாக அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

வாக்களிக்க வாகன வசதி: இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது வாக்கினை செலுத்த தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்யப்பட உள்ளது. வாகன வசதி வேண்டுவோர், 0424-1950மற்றும் 0424 – 2267674, 2267675,2267679, 96004 79643 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT