தமிழகம்

‘ஒருவேளை நீதிமன்ற வளாகத்துக்குள் அந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால்..?’ - சென்னை ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ''ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் ஒருவேளை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வெடித்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்?'' என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதைப்படித்துப் பார்த்த நீதிபதிகள், ''இந்த சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த விவகாரத்துக்குப்பிறகு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என கேள்வி எழுப்பினர்.

அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஆறு வழக்கறிஞர்களும் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்துக்குள் வருபவர்கள் போலீஸாரால் சோதனையிடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார். அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், “அரசு தரப்பில் கூறப்படுவது போல சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் எந்த வெடிகுண்டுகளும் கொண்டு வரப்படவில்லை. அது தவறான குற்றச்சாட்டு,'' என்றனர்.

அதையடுத்து நீதிபதிகள், ''உயர் நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டுகள் ஒருவேளை வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இது அனைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அலட்சியம் காட்டக்கூடாது” என அதிர்ச்சி தெரிவித்தனர். மேலும், “உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது முக்கியமானது என்பதால் இதுதொடர்பாக தமிழக காவல் துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் தங்களது பரிந்துரைகளை அளிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுதினத்துக்கு (ஜன.29) தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT