கடலூர்: சிதம்பரத்துக்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.26) மதியம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில், ‘சனாதான கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைத்து சமூக மக்களோடும் இணக்கமாகவும், அவர்களின் கல்வி உயர்வுக்காகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தாவை திருடுவதற்கு முயற்சிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது,
ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளை வழங்காத சனாதன சக்திகளின் குரலாக ஒலிக்கின்ற ஆளுநர் ஆர்.என். ரவி, சாமி சகஜானந்தா பிறந்த நாள் விழா நிகழ்வுக்கு சிதம்பரத்துக்கு நாளை (ஜன.27) வருவதை வன்மையாக கண்டிப்பது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாளை (ஜன.27) காலை 10 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலை அருகில் இண்டியா கூட்டணி கட்சிகளின் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்கதமிழ்ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர், இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் தில்லை மக்கின் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் குமரன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, சிதம்பரம் நகர் மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.