சென்னை: ஒவ்வொரு சாதனைக்கும் பின்னால் கடின உழைப்பு இருக்கும் என்று ரோட்டரி சங்க விருது விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உருக்கத்துடன் கூறினார். சென்னை மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி கிளிட்டரிங் ஸ்டார் விருது வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடிக்கும், பத்திரிகை, கலை, பொது சேவைக்காக ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநர் வி.முரளிக்கும், மருத்துவம், ஆராய்ச்சி, சமூக சேவை ஆகிய பணிகளுக்காக சவீதா நிகர்நிலை பல்கலைக் கழக வேந்தர் என்.எம்.வீரய்யனுக்கும் ரோட்டரி வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் வழங்கி கவுரவித்தார். விழாவில் நீதிபதி பேசும்போது, ‘‘ரோட்டரி சங்கம் பல்வேறு சமூக சேவைகளை சிறப்பாகச் செய்து வருகிறது. கல்வி, மருத்துவம், இதழியல், பாதுகாப்பு பணி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரோட்டரி விருது வழங்கி கவுரவித் திருப்பது பாராட்டுக்குரியது. இந்த விருது என்பது சாதனைகளுக்கான கவுரவம் மட்டும் அல்ல. அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு சாதனைக்கும் பின்னால் கடின உழைப்பு இருக்கும்’’ என்றார்.
விருது பெற்றவர்கள் ஏற்புரையாற்றினர். காமகோடி பேசும்போது, ‘‘நீடித்தவளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சி பணிகளுக்காக ஐஐடி-ரோட்டரி ஆராய்ச்சி மையம் ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை தேசிய அளவில் 28 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் இது 50 சதவீதத்தைக் கடந்துவிட்டது. 2035-ம் ஆண்டுக்குள் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இளங்கலை பட்டதாரிகளாக இருக்கக்கூடிய நிலை உருவாக வேண்டும்’’ என்றார். என்.முரளி பேசும்போது, ‘‘ரோட்டரி சங்கம் சர்வதேச அளவில் மிகப்பெரிய சேவை நிறுவனம். பல்வேறு வழிகளில் ஏராளமான சமூக சேவைகளை ஆற்றிவருகிறது.
அந்த வகையில், ரோட்டரி சங்கம் வழங்கியுள்ள விருதை பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்’’ என்றார். வீரய்யன் பேசும்போது, ‘‘ரோட்டரி சங்கமும், எங்கள் பல்கலைக்கழகமும் இணைந்து பணியாற்றி ஏராளமான நன்மைகளை இந்த சமூகத்துக்கு செய்யமுடியும். எங்கள் சவீதா மருத்துவமனையில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இலவச மருத்துவ சேவைபெறுகிறார்கள். கரோனா காலத்தில் அனைத்து நோயாளிகளை யும் அனுமதித்து சிகிச்சை அளித்தோம்’’ என்றார்.
விழாவில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் மகாவீர் போத்ரா, விருது குழு தலைவர் ரவி வெங்கட்ராமன், மாவட்ட ஆலோசகர் பிடிஜிஐசக் நாசர், மாவட்ட செயலாளர் கள் டாக்டர் ஆர்.ராம்குமார், எம். செந்தில்குமார், மாவட்ட கற்றல் ஒருங்கிணைப்பாளர் எஸ்.முத்து பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.