வானதி சீனிவாசன் | கோப்புப்படம் 
தமிழகம்

குமரியில் வள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டியதே ஆர்எஸ்எஸ்தான்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் பதில்

செய்திப்பிரிவு

குமரியில் வள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டியதே ஆர்எஸ்எஸ்தான் என்ற நிலையில், வள்ளுவரை களவாட முயல்வது திமுகதான் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வள்ளுவர், வள்ளலார் போன்று தமிழகத்தில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயற்சிக்கிறது" என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து வானதி சீனிவாசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: வள்ளுவரும் வள்ளலாரும் இந்து மதத்தில் பிறந்தவர்கள். குறிப்பாக திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தை இடம்பெறச் செய்த வள்ளுவர், பல்வேறு ஆன்மிக ஞான கருத்துகளை முன்வைத்திருந்தார். ஆனால் வள்ளுவரின் ஆன்மிக அடையாளத்தை அழித்து, திருக்குறளில் உள்ள ஆன்மிகத்தை அகற்றும் முயற்சியை, இந்து மத அழிப்பை லட்சியமாகக் கொண்ட திமுக காலங்காலமாக செய்து வருகிறது.

அண்மை காலத்தில் வாழ்ந்த வள்ளலாரையே திருநீறு இல்லாத படத்துடன் வெளியிட்டு, அவரின் அடையாளத்தை மறைப்பவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவரின் அடையாளத்தை மறைப்பதில் வியப்பில்லை. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையை அமைத்ததோடு, அருகில் வள்ளுவர் சிலை அமைக்க தீர்மானித்த ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் ஏக்நாத் ரானடே, கடந்த 1979-ம் ஆண்டு ஏப்.15-ம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, முதல்வர் எம்ஜிஆர், அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை கொண்டு சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

நாங்கள் எப்போதும் வள்ளுவரை போற்றுகிறோம். வள்ளுவரை களவாட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் திமுகதான், மற்றவர்கள் மீதே பழி சுமத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT