தமிழகம்

சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த பழனிசாமியின் மனு தள்ளுபடி: விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துள்ளதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்மீது உரிய விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவி்ட்டது.

சேலம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது பழனிசாமி தரப்பில், ‘‘புகார்தாரரான மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, வேட்பாளரோ அல்ல. தவிர, வேட்புமனுவில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை என்பதால் இந்த புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல’’ என்று வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், ‘‘புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யுமாறு சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பழனிசாமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT