புதுச்சேரி: ரேஷன் கடைகள் திறந்தும் புதுச்சேரியில் அரிசி தரப்படாததால் அக்டோபர், நவம்பர் மாத அரிசிக்கு பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.32.7 கோடி செலவானதாக குடிமைப் பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரேஷனில் டிசம்பர் மாத இலவச அரிசியை பத்து நாட்களில் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு 515 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆட்சியாளர்களுக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பயனாளிகளுக்கு அரிசிக்கு பதில் நேரடியாக பணம் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது. இதனால் ரேஷன்கடைகள் மூடப்பட்டது. மஞ்சள் கார்டுக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.300, சிகப்பு கார்டுக்கு 20 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.600 வங்கியில் செலுத்தப்பட்டது.
அரிசி விலை உயர்வு உட்பட பல காரணங்களால் மீண்டும் அரிசி வழங்க கோரிக்கை எழுந்தது. இதையேற்ற முதல்வர் ரங்கசாமி, மீண்டும் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். தீபாவளிக்கு இலவச அரிசியை ரேஷன் கடைகளை திறந்து வழங்கினர். ஆனால் அதன்பிறகு மாத அரிசியை தரவில்லை. டெண்டர், கொள்முதல் உள்ளிட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. பின்னர் ரேஷன்கடைகள் செயல்படவில்லை.
இதைத் தொடர்ந்து ரேஷன்கடைகளில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த 10ம் தேதி வில்லியனுாரில் நடந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி பைகள் அனுப்பி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக கதிர்காமம், இந்திராநகர் தொகுதிகளுக்கு இலவச அரிசி 6 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரிசி தர பரிசோதனைக்கு பின் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
இந்நிலையில், இலவச அரிசியை 10 கிலோ பைகளில் அடைத்து வழங்குவதற்கான கொள்முதல் பணியை கான்பெட் நிறுவனம் மூலம் குடிமைப்பொருள் வழங்கல்துறை மேற்கொண்டது. மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 54 ஆயிரத்து 255 ரேஷன்கார்டுகளுக்கு தேவையான 4 ஆயிரத்து 922 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் இன்னும் 10 நாட்களுக்குள் இலவச அரிசி வழங்கும் பணியை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்துக்கு சிகப்புகார்டுதாரர்களுக்கு ரூ.600, மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூ.300 அரிசிக்கான பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு ரூ.32.73 கோடி செலவாகி உள்ளது என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.