காரைக்குடி: மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை கொண்டுவரும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை. வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, நிர்வாகக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் திறந்துவைத்தார்.
பின்னர், பல்கலை. பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் ரவி வரவேற்றார். விழாவில், கருத்தரங்கு கூடத்துக்கு ‘வீறுகவியரசர் முடியரசனார் அரங்கு’ என்று முதல்வர் பெயர் சூட்டினார். தொடர்ந்து, கருணாநிதி நூற்றாண்டு விழா தேசியக் கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு நூலை முதல்வர் வெளியிட, துணைவேந்தர் பெற்றுக் கொண்டார். பின்னர், முதல்வர் பேசியதாவது: வள்ளுவர் நெறிகளே, நமது வாழ்வியல் நெறிகளாக மாறும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். திருக்குறளைப் பின்பற்றி
னால்தான் தமிழகமும், உலகமும் காப்பாற்றப்படும். அதேநேரத்தில், வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற சமத்துவத்தைப் பேசிய மாமனிதர்களை களவாட ஒரு கூட்டமே முயல்கிறது. அதற்கு எதிரான காவலர்களாக ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்டும்.
‘அறிவுதான் நம்மைக் காக்கும் கருவி’ என்று வள்ளுவர் சொன்னதற்கு அடையாளமாக, ப.சிதம்பரம் தனது தாயார் பெயரில் நூலகத்தைக் கட்டியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நாட்டில் அதிக அரசு பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில், தேசிய சராசரியைவிட 2 மடங்காக உயர்ந்துள்ளது. உயர்கல்வியில் சிறந்து விளங்க, பல்கலைக்கழக நிர்வாகம் மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும்.
உயர்கல்வி மாணவர்களுக்குத் திட்டங்கள் வகுத்து, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்களுக்கு ஊதியம், கட்டமைப்பு வசதிகளைச் செய்வது மாநில அரசு. ஆனால், வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கா என்பதுதான் எனது கேள்வி. அதனால்தான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை கொண்டுவரும் வரை சட்டப் போராட்டம் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக, கவிஞர் அண்ணாதாசன் எழுதிய ‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை ப.சிதம்பரம் வெளியிட, பல்கலை. துணைவேந்தர் பெற்றுக்கொண்டார்.
மேடையில் அழுத ப.சிதம்பரம்: விழாவில் பேசிய ப.சிதம்பரம் தனது தாயாரை நினைவுகூர்ந்து பேசினார். அப்போது அவர் அழுதார். தொடர்ந்து தழுதழுத்த குரலில் பேசிய அவர், ‘‘தமிழ் இலக்கியம், இயல், இசை, நாடகத்தை தாண்டி, கணிதம், கணினி, அறிவியல், சட்டம், மருத்துவம், வேளாண்மை, மேலாண்மை, டிஜிட்டல், ரோபோட்டிக்ஸ் தமிழ் என புதிய வடிவங்களை எடுக்கவேண்டும். இந்த நூலகம் உலகம் போற்றும் ஆராய்ச்சி மையமாக வும், புதிய படைப்பாளிகளின் நாற்றுப் பண்ணையாகவும் அமைய வேண்டும். மிகப் பெரிய இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க, சேகரிக்க தமிழன்பர்கள் உதவ வேண்டும்’’ என்றார்.