சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக புழலில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் வழக்கமாக ஜனவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜன.13 முதல் தீவிரமடைந்து ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் பொங்கலுக்கு முன்பாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், பொங்கல் முடிந்த பிறகு, நேற்று முன்தினம் மாலையில் இருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், பூங்காக்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்கியது. காலையில் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. காலை முதலே மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியாக, ரம்மியமான சூழல் நிலவியது.
மேலும் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை புழலில் 6 செமீ, நுங்கம்பாக்கம், தரமணி, திருவொற்றியூர், ஆலந்தூர், சென்னை விமானநிலையம், மீனம்பாக்கம், அமைந்தக்கரை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 5 செமீ, மடிப்பாக்கம், பெரம்பூர், மணலி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, அடையார், மதுரவாயல், எண்ணூர், சோழிங்கநல்லூர், அண்ணாநகர் மேற்கு, ராஜா அண்ணாமலைபுரம், கொளத்தூர், அயப்பாக்கம், உத்தண்டி, அயனாவரம், எம்ஜிஆர் நகர், செம்பரம்பாக்கம், வடபழநி, தண்டையார்பேட்டை, ஐஸ் ஹவுஸ், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.