சென்னை: பொய் வாக்குறுதிகளால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணித்ததுபோல, 2026 தேர்தலில் திமுகவையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000, அதைதொடர்ந்து 2021-ல் ரொக்கமாக ரூ.2,500, பின்னர் 2022, 2023-ம் ஆண்டுகளில் தலா ரூ.1000 சேர்த்து வழங்கப்பட்டது. இவ்வாறு கடந்த ஆண்டுகளில் ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டால், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய 3 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டு, ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. இதனால் மொத்தமாக 2.21 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் மட்டுமே வாங்கியுள்ளனர். மீதமுள்ள 33 லட்சம் பேர் வாங்கவில்லை.
மேலும் கொடுக்கப்பட்ட அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பை மக்களே புறக்கணித்துள்ளனர். இதுவே அரசின் மீதான மக்களின் அதிருப்தியை காட்டுகிறது. இதைப்போலவே வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.