ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. கடந்த 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 13-ம் தேதி வரை 9 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கட்சி நிர்வாகிகளுடன் சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து நேற்று ஊர்வலமாக வந்து, வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தார். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், வேட்பாளர் மட்டும் சிறிது தூரம் நடந்து வந்தார். பின்னர், கார் மூலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
செய்தியாளர்களிடம் சீதாலட்சுமி கூறும்போது, “ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். திமுக அரசின் அடக்குமுறையை மீறி, சீமான் தலைமையில் பிரச்சாரம் மேற்கொள்வோம். வாக்காளர்களைச் சந்தித்து நீதி கேட்போம். அவர்கள் எங்களை ஆதரித்து, திமுகவுக்கு பாடம் புகட்டுவர். எந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வரும் 20-ம் தேதி சீமான் அறிவிப்பார்” என்றார்.
தொடர்ந்து, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், கூட்டணி கட்சியினருடன் வந்து தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்தியூர் செல்வராஜ் எம்.பி., திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது,“திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி போட்டியிடுகிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியை மக்கள் வழங்குவர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கென தனிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டிய அவசியமில்லை. பொய்களை மட்டுமே பேசி, அரசியல் கட்சிகளில் வியாதியாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி. அவர்களோடு போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக கருதுகிறேன்” என்றார்.
மனுக்கள் இன்று பரிசீலனை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் 56 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 58 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வரும் 20-ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக உள்ளது.