தமிழகம்

தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை; 2 பேருக்கு சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் டிசம்பர் 8-ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்டது.

படகுகளிலிருந்த கண்ணன், காளி, முத்துராஜ், பத்ரப்பன், யாசின், சேசு, ராமகிருஷ்ணன், வேலு ஆகிய 8 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் புதன்கிழமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் 6 மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்பைடயில் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 2 பேருக்கு தலா ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர் விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT