புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு எச்எம்பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் பரவும் எச்எம்பிவி வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. புதுவையில் சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் 5 வயது சிறுமி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உடல் நலம் தேறி நலமுடன் வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில்,. ஜிப்மர் மருத்துவமனையில் கடும் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காக சேர்ந்த 5 வயது சிறுமிக்கும் எச்எம்பி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று கூறுகையில், "புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கடும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அந்த சிறுமிக்கு எச்எம்பி வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து அந்த சிறுமி நலமாக உள்ளார். மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.