புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான நாராயணசாமி | கோப்புப் படம். 
தமிழகம்

புதுச்சேரி | 8 மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் - நாராயணசாமி குற்றச்சாட்டு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ''புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தைப் பெற ஆளுநர் அனுமதி இல்லாமல் முதல்கட்ட கடிதத்தை 8 கம்பெனிகளுக்கு தந்துள்ளதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்'' என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நாராயணசாமி இன்று கூறியதாவது: ''மின்சார துறையை அதானியிடம் ஒப்படைக்க ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திடீரென ரூ. 330 கோடி முதலீடு செய்து ப்ரீபெய்டு மின் மீட்டர் வாங்கி தற்போதுள்ள மீட்டர்களை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதையும் அதானியிடம் ஒப்படைப்பதற்கான வேலையை முதல்வரும், மின்துறை அமைச்சரும் செய்து வருகின்றனர். மின்சார புதிய கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாது என முதல்வர் ரங்கசாமி கூறியிருந்தார். ஆனால் 2025 ஜனவரியில் மக்களுக்கு வழங்கப்பட்ட மின்சார ரசீதில் பழைய நிலுவை கட்டணத்தையும் சேர்த்து கொடுத்துள்ளனர்.

மக்களை ஏமாற்றும் வஞ்சிக்கும் வேலையை அரசு செய்து வருகிறது. புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தை பெற முதல்கட்ட கடிதம் 8 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் இல்லாமல் இடைக்கால அனுமதியை புதுச்சேரி அரசு, அந்த கம்பெனிகள் மதுபான உற்பத்தி செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

8 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்க சிக்கல் உள்ளதால் அமைச்சரவையில் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2 மதுபான தொழிற்சாலைகளுக்கு காலக்கெடுவை மீறி முன்னதாகவே தேதியிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி வியாபாரம் செய்திருந்தால் அனுமதி என அந்த தொழிற்சாலைக்கு கூறியுள்ளனர். துணைநிலை ஆளுநர் அனுமதி இல்லாமல் தற்காலிக ஒப்புதலை யார் கொடுத்தது என்பது பற்றி முதல்வர் ரங்கசாமி தெரிவிக்க வேண்டும்.

மதுபான உரிமை கொடுப்பதற்காக இந்த அரசு செய்துள்ள தில்லுமுல்லு, ஊழல் தொடர்பாக துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. முதல் கட்டமாக துணை நிலை ஆளுநரை சந்திக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டால் அதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளதாகத் தான் அர்த்தம். இவ்வாறு நாராயணசாமி குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT