சென்னை: சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.8 முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கூட்டத் தொடர் நேற்று நிறைவடைந்தது. மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.