ஈரோடு: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் கட்டுமான பணியை மேற்கொள்ளும் பிரபலமான ஈரோடு கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள செட்டிபாளையம் என்ற இடத்தில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் எனும் கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடிசைமாற்று வாரியம், பொதுப்பணிதுறை, போலீஸ் வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசு பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு, இன்று காலை கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரகுபதிநாயக்கன்பாளையம் என்ற இடத்தில் உள்ள இந்நிர்வாகியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடந்த இடங்களில் வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிறுவனம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், பண பரிமாற்ற விபரங்கள், வருமான வரி செலுத்திய விபரங்கள் குறித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், கணக்கில் வராத சொத்துக்கள், ரொக்கம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்பிற்கு பின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இதே கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல், கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாகவும் இந்த நிறுவனத்தின் நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வருமானவரிச்சோதனை நடந்து வரும் கட்டுமான நிறுவன உரிமையாளர், தமிழக எதிர்கட்சித்தலைவர் பழனிசாமியின் உறவினராவார். பழனிசாமியின் மகனும், ராமலிங்கத்தின் மகனும் ஒரே வீட்டில் பெண் எடுத்து சம்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.