மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

“போராடும் எதிர்க்கட்சிகள் மீது ஒடுக்குமுறையை ஏவி விடுகிறது திமுக அரசு” - எல்.முருகன் காட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: “அண்ணா பலகலைக்கழக மாணவிக்கு நியாயம் கோரி தமிழக பாஜகவின் மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை வீட்டுக் காவலிலும் வைத்திருக்கும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி தமிழக பாஜகவின் மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை வீட்டுக் காவலிலும் வைத்திருக்கும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை மறைக்கும் முயற்சிலேயே திமுக அரசு ஈடுபடுகிறது. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக போராட்டங்களை காவல் துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது. இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கவும் போலி திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. வரும் காலங்களில் இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT