தமிழகம்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறுகிறது: தமிழக அரசு அனுமதி

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு நாளை (ஜன.4) நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டாக கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு நாளை நடத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, வாடிவாசல், கேலரி, காளை சேகரிப்பு, தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் விநியோகப் பணியும் இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. களமிறக்க உள்ள காளைகள் மற்றும் களமிறங்க உள்ள மாடுபிடி வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை ஆட்சியர் எம்.அருணா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, புதுக்கோட்டை கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா மற்றும் வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் உடனிருந்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் மருத்துவ முகாம், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை துறை அலுவலர்கள் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக அனைத்து விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT