தமிழகம்

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை: திருமாவளவன்

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை. இப்பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு. அதேவேளையில் எதிர்க்கட்சிகளும் இந்த சம்பவத்தை அரசியலாக்குவதற்காகப் போராட்டங்கள் நடத்தக் கூடாது.

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட அந்த குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தவிர்த்து வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. அதனால், அரசும், காவல்துறையும் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.

ஞானசேகரன் சிறையில் இருக்கும்போதே விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும். அவரையும் தாண்டி வேறு யாரும் அந்தக் குற்றச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களும் கைது செய்யப்பட வேண்டும். விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சம்பவமும், கைதும்: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்​தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்ட சம்பவம் தமிழகம் முழு​வதும் பெரும் அதிர்​வலைகளை ஏற்படுத்​தி​யுள்​ளது. சம்பவத்​தில் கோட்​டூர், மண்டபம் சாலை பகுதி​யைச் சேர்ந்த பிரி​யாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) கைது செய்​யப்​பட்​டுள்​ளார். ஜாமீனில் வெளியே வர முடி​யாதபடி அவர் மீது 8 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​கு பதிந்​துள்ளனர். ஞானசேகரன் மீது கோட்​டூர்​புரம் காவல் நிலை​யத்​தில் 20 வழக்​குகள் நிலுவை​யில் உள்ளன. இவற்றுள் பெரும்​பான்​மையான வழக்​குகள் திருட்டு சம்பந்​தப்​பட்ட வழக்​கு​கள்.

‘யார் அந்த சார்’ போராட்டம்: இந்த வழக்கில் மாணவி கொடுத்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த எஃப்ஐஆரில் கைதான நபர் போனில் சார் என்று ஒருவருடன் பேசியதாக குறிப்பிடப்பட்டதை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுக யார் அந்த சார்? என்று போஸ்டர் தொடங்கி போராட்டம் வரை கேள்வி எழுப்பி வருகிறது.

அண்மையில் இது தொடர்பாக விளக்கமளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், உண்மைக் குற்றவாளி தப்பிவிடாமல், மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ‘யார் அந்த சார்’ போராட்டத்தை அதிமுக முன்னெடுத்து வருகிறது.” என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பேட்டியளித்துள்ளா விசிக பொதுச் செயலாளர் திருமாவளவனும், அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஞானசேகரனைத் தவிர வேறு யாரும் சம்பந்தப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT