சென்னை: ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்ட ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ புத்தகம் குறித்த சிறப்பு பார்வை நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் இன்று (ஜன. 1) காலை ஒளிபரப்பாகிறது.
சென்னையில் தற்போது நடைபெற்று வரும் புத்தகக் காட்சியை முன்னிட்டு சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்து எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார்.
அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்ட ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ புத்தகம் பற்றிய சிறப்பு பார்வை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
மொழிகள், கலாச்சாரத்தால் பிளவுண்டு கிடந்த இந்தியர்களை, நாட்டின் விடுதலைக்காக ஓரணியாகத் திரள வைத்தவர் மகாத்மா காந்தி. தேசிய அரசியலில் காந்திக்கு இணையான சகாப்தமாக உருப்பெற்று எழுந்த முன்வரிசை தேசியத் தலைவர் ராஜாஜி. விடுதலைப் போராட்டத்திலும், சமூகப் புரட்சியிலும், நாடு சுதந்திரம் பெற்ற தருணத்திலும், பிரிவினையின்போதும், தேசம் எதிர்கொண்ட ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் இந்திய அரசியலில் ராஜாஜியின் பங்களிப்பு தனித்துவம் மிக்கதாக, தவிர்க்க முடியாததாக இருந்து வந்துள்ளதை விரிவாக அலசுகிறது 800 பக்கங்கள் கொண்ட இந்த பெரும் நூல்.
இந்த நூலில், ராஜாஜியின் சமகாலத் தலைவர்கள், அவரது அமைச்சரவை சகாக்கள், அரசியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் குறித்த கூடுதல் விவரங்களை 7401296562 அல்லது 7401329402 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு அறியலாம். சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் 55, 56, 668, 669 ஆகிய அரங்குகளில் இந்த நூல் கிடைக்கும்.