தமிழகம்

மீண்டும் சம்பவம் நிகழாதவாறு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் நேற்று விடுத்த அறிக்கை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறி​யியல் கல்லூரி​யில் பயிலும் மாணவி ஒருவர் ராஜா அண்ணா​மலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார்

. அதில், “எனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்​தின் பின்​புறம் பேசிக் கொண்​டிருந்​த​போது அடையாளம் தெரியாத நபர் இருவரை​யும் அச்சுறுத்​தினார். பின்னர் அதே நபர் எனது நண்பரை தாக்​கி​விட்டு என்னிடம் பாலியல் சீண்​டலுக்கு முயன்​றார்” என தெரிவித்​துள்ளார்.

கோட்​டூர்​புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில் ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய காவல் குழு​வினருடன் வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்​றனர். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார் குழு​வினருக்​கும் தற்போது தகவல் தெரிவிக்​கப்​பட்டு, குழு​வின் விசாரணை மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது.

பல்கலைக்கழக நிர்​வாகம் காவல் துறை​யினரின் விசா​ரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. பல்கலைக்கழக வளாகத்​தில் பாது​காப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்​டுள்​ளனர். கண்காணிப்பு கேமராக்​களும் பொருத்​தப்​பட்​டுள்ளன. இருப்​பினும், இந்த விரும்பத்​தகாத சம்பவம் நடந்​துள்ளது.

இதுபோன்ற சம்பவம் மீண்​டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாது​காப்பு நடவடிக்கைகள் எடுக்​கப்​படும். அண்ணா பல்கலைக்​கழகத்தை பொறுத்​தவரை அனைத்து மாணவர்​களின் பாது​காப்பு எப்போதுமே முதன்​மையான முன்னுரிமையாக உள்ளது. இவ்​வாறு அறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்சர் உறுதி: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இந்த சம்பவத்தில் வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்’’ என தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT