சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள் வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. சுடுமண் உருவப் பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச்சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2,850-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக தோண்டப்பட்ட குழியில் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவமணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள்வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த பொருட்களை வட மாநிலங்களில் இருந்து வாங்கி, பண்டைய தமிழர்கள் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது என்றார்.