சென்னை: தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.நடராஜன் பாரதிதாஸ், செயலாளர் கே.செல்லப்பன், பொருளாளர் டி.சரவணன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெய்சங்கர், அமைப்புச் செயலாளர் பி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றின் உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் முடிதிருத்துதல் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச கட்டணத்தில் ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாநிலத் தலைவர் ப.நடராஜன் பாரதிதாஸ் கூறும்போது, “முடி திருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான குறைந்தபட்சக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், முடிதிருத்தும் நிலையம் வைத்துள்ள கார்ப்பரேட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் சேவிங் ரூ.49, கட்டிங் ரூ.99 என கட்டணம் நிர்ணயித்து சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப்பாதிக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
அவர்களும் திருத்தப்பட்ட விலை பட்டியலின்படி, சேவிங் ரூ.60, கட்டிங் ரூ.120, கட்டிங், சேவிங் ரூ.180, சிறுவர் கட்டிங் ரூ.100 என்பதை குறைந்தபட்சக் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.இதிலிருந்து ரூ.10 அதிகரித்து ஏசி உள்ள கடைகள் வசூலித்துக் கொள்ளலாம். இந்த கட்டணத்தை புறக்கணிக்கும் பட்சத்தில் அனைத்து தொழிற் சங்க தலைவர்களுடன் ஆலோசித்து விரைவில் தமிழகம் தழுவிய கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம்” என்றார்.