தமிழகம்

ஹைதராபாத், பெங்களூருக்கு புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்கம் 

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது. விமானத்தில் போதிய பயணிகள் பயணிக்காததால் கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 8 மாதங்களாக புதுவையில் இருந்து விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இதையடுத்து, புதுவை அரசு மீண்டும் விமான சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக இண்டிகோ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டு டிச.20-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை துவங்குவதாக அறிவித்தது.

அதன்படி, இன்று காலை 11.10 மணிக்கு பெங்களூரில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம் 74 பயணிகளுடன் புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானம் தரையிறங்கிய போது, தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஹைதராபாத்துக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமான சேவையை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்த விமான சேவை தினமும் இருக்கும். பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12.25க்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர், மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். அதேபோல் ஹைதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 பெங்களூரு சென்றடையும்'' என்றனர்.

SCROLL FOR NEXT