ராமேசுவரம்: ராமநாதபுரம் கள்ளிக்கோட்டை கோயிலில் கல்வெட்டுகளை படியெடுக்கும் வகுப்பு நடைபெற்றது. கல்வெட்டை சுத்தம் செய்து, மேப்லித்தோ பேப்பரை தண்ணீரில் நனைத்து அதன்மீது ஒட்டி, பள்ளமான எழுத்துகளில் பேப்பர் பதித்து, பிரஸால் அடித்து, கருப்பு மை தடவி, கல்வெட்டை எளிதாக படிக்க முடிந்ததை பார்த்து மாணவ மாணவியர் வியந்தனர்.
பரமக்குடி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. பயிலரங்கத்தை கல்லூரி பொறுப்பு முதல்வர் சிவகுமார் தொடங்கி வைத்தார். வரலாற்றுத்துறைத் தலைவர் கோவிந்தன் வரவேற்புரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, முதல் நாள் ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடங்கள் பற்றியும், தமிழில் கல்வெட்டு எழுத்துகளை எழுதவும் படிக்கவும் பயிற்சியளித்தார்.
இரண்டாவது நாள் பயிலரங்கத்தில் ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை ஓவியங்களை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து கள்ளிக்கோட்டை கோயிலில் நடைபெற்ற கல்வெட்டுகளை படியெடுக்கும் வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கல்வெட்டை சுத்தம் செய்து, மேப்லித்தோ பேப்பரை தண்ணீரில் நனைத்து அதன்மீது ஒட்டி, பள்ளமான எழுத்துகளில் பேப்பர் பதித்தி, பிரஸால் அடித்து, கருப்பு மை தடவி, கல்வெட்டை எளிதாக படிக்க முடிந்ததை பார்த்து மாணவ மாணவியர் வியந்தனர்.
அதேபோல் பள்ளமான கல்வெட்டு எழுத்துகளில் அரிசி மாவு தடவி படிக்கும் முறையையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அறிவழகன், விஜயகுமார். பாரதி, மோகன கிருஷ்ணவேணி, மும்தாஜ் பேகம், ராமமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.