கோப்புப் படம் 
தமிழகம்

குமரியில் ஊர் பெயரில் சர்ச்சை: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: குமரியில் ஊர் பெயர் சர்ச்சை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்திக்காட்டுவிளை என்னும் கிராமம் உள்ளது. ஊரின் பெயரை மாற்றுவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்த நிலையில் 1988ம் ஆண்டு நீதிமன்றம் ஆத்திக்காட்டுவிளை எனும் பெயரை மாற்றக்கூடாது என்றும், அவ்வாறு எழுதப்பட்டுள்ள வேறு பெயர்களை மாற்றி ஆத்திக்காட்டுவிளை என்றே ஆவணங்களில் பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் ஆத்திக்காட்டுவிளை எனும் பெயரே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமமான ஜியோன்புரம் என்ற பெயரை இப்பகுதி முழுமைக்கும் மாற்றும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி, சத்துணவு கூடம், பஞ்சாயத்து அலுவலக பதிவேட்டில் ஜீயோன்புரம் எனும் பெயர் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதோடு வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவற்றின் ரசீதுகளிலும் ஜீயோன்புரம் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் அனைத்து அரசு அலுவலகங்க பலகைகளிலும் ஆத்திக்காட்டுவிளை என்ற பெயரை பயன்படுத்துவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி. மரிய கிளாட் அமர்வு விரித்து, மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT