தமிழகம்

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன்: சீமான்

ம.மகாராஜன்

சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்கவுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் நிலக்கரி அனல் மின் நிலையத்துக்காக 2009-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனல் மின் நிலைய விரிவாக்கத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் வரும் டிச.20-ம் தேதி எர்ணாவூரில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் உள்ள காமராஜர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பங்கேற்க உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி, அதன் விளைவுகளால் அவதிப்பட்டு வரும் வடசென்னை எண்ணூர் பகுதியில், மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதையொட்டிய கருத்துக் கேட்பு கூட்டமானது வரும் 20-ம் தேதி எர்ணாவூரில் நடைபெறவுள்ளது.

நிலம், நீர், காற்று மாசுபட்டு ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்புகளை சந்தித்துவரும் எண்ணூர் மக்களின் குரலாக இக்கூட்டத்தில் பங்கேற்று, எனது கருத்துகளை பதிவு செய்யவுள்ளேன். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு, தங்களது கருத்துகளையும் பதிவு செய்வதன் மூலமே சூழலியல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT